வியாபம் ஊழல் மர்ம மரணங்கள் கொலை அல்ல: அமைச்சர் உமா பாரதி
டெல்லி: வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள், அதன் விசாரணையில் உதவி செய்பவர்கள் அடுத்தடுத்து மர்ம முறையில் இறப்பதை நினைத்தால் பயமாக இருப்பதாக மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறுகையில்,
வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள், அதன் விசாரணையில் உதவி செய்பவர்கள் அடுத்தடுத்து மர்ம முறையில் இறப்பதால் மத்திய பிரதேசத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. எனக்கு தெரிந்தவர்களின் நிலையை நினைத்தால் பயமாக உள்ளது. நான் ஒரு அமைச்சராக இருந்தாலும் பயமாக உள்ளது. என் பயத்தை நான் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹானிடம் தெரிவிப்பேன்.
வியாபம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலில் கூறியதே நான் தான். வியாபம் ஊழல் குறித்த முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின்படி எனது பெயரை பதிவு செய்துள்ளனர். இது நியாயமே இல்லை. ஊழல் வழக்கில் என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
சதி செய்து வியாபம் ஊழலில் என் பெயரை சேர்த்துவிட்டனர். ஊழலில் தொடர்புடையவர்களை யாரும் கொலை செய்யவில்லை. அப்பாவியான அவர்கள் வெட்கத்தால், பயத்தால் இறந்துள்ளனர். ஊழல் வழக்கில் என் பெயர் சேர்க்கப்பட்டபோது நானும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
நான் மத்திய பிரதேச மக்களுக்காகவும், முதல்வர் சவுஹானுக்காகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை குழு ஆகியவை மீது நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க சவுஹான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது ஊழியர் குடியிருப்பில் வசித்த ஒருவரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. தேர்வில் அவரது மதிப்பெண்கள் மாற்றப்பட்டது அவருக்கே தெரியாது. அவர் எனது முகவரியில் தங்கியிருந்ததால் அவரது மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது.
இந்த விஷயம் அவருக்கு தெரியாது. அவர் என் ஊழியர்கள் குடியிருப்பில் வசித்ததால் அவர் பெயர் என் முகவரியில் இருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் தெரிவிக்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டனர். முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தை அடையும் முன்பு மீடியாவுக்கு அனுபப்பி வைக்கப்பட்டுவிட்டது என்றார்.