ரத்ததானம் செய்வோர், நோயாளிகள் இடையே பாலம் அமைத்து அசத்தும் பெங்களூர் பள்ளி மாணவி
பெங்களூர்: ரத்த தானம் செய்வோருக்கும், ரத்தம் வேண்டுவோருக்கும் பாலமாய் வெப்சைட் உருவாக்கி உதவி வருகிறார் பெங்களூரை சேர்ந்த பள்ளி மாணவி.
அன்னதானத்தை போலவே, தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம். ஆனால், அவசரமாக ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது, யாரை அணுகுவது, எப்படி ரத்தத்தை பெறுவது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரத்தம் தேவை என்று தகவலை பரப்பினாலும், அதை ரீட்விட் செய்வோர்தான் அதிகமே தவிர, தானாக முன்வந்து ரத்தம் கொடுப்போர் சொற்பமே.
பள்ளி மாணவி
ரத்தம் கொடுப்பதோடு, அதை உரிய நேரத்திற்குள் கொடுப்பது அவசியம். இந்த குறைபாடுகளை நீக்க வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளார் பெங்களூரிலுள்ள 'தி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் பெங்களூர்' (TISB) என்ற பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆருனிகா மகம்.
வெப்சைட்
வெப்சைட் உருவாக்குநர் துணை கொண்டு ஆருனிகா உருவாக்கியுள்ள வெப்சைட்டின் பெயர், givebloodindia.org ஆகும். அத்தோடு நில்லாமல், பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களுக்கு சென்று, ரத்த தான அவசியத்தையும், தனது வெப்சைட் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து வருகிறார்.
பதிவு செய்துள்ளனர்
ஆருனிகா மற்றும் அவரது தோழர், தோழிகளின் விடாமுயற்சியால், ரத்ததானம் செய்ய இதுவரை 500 பேர் வெப்சைட்டில் பெயர்களை பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் ரத்தம் தேவைப்படும் 15 பேர் இந்த வெப்சைட் மூலமாக பலனடைந்துள்ளனர்.
எஸ்எம்எஸ்
ரத்ததானம் செய்வோரின் பெயர், பிளட் குரூப், போன் எண் போன்றவை அந்த வெப்சைட்டில் தரப்படுகிறது. ரத்தம் தேவைப்படுவோர் வேண்டுகோள்விடுக்கும்போது, ரத்ததானம் செய்வோர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் காலவிரையம் மிச்சமாகி, உடனடியாக ரத்தம் உரியவர்களை சென்று சேர்கிறது.
கைகொடுக்கும் குடும்பம்
எஸ்எம்எஸ் அனுப்ப ஆகும் செலவு மற்றும் வெப்சைட் பராமரிப்பு செலவீனங்களை ஆருனிகா தந்தை சேத்தன் மகம் ஏற்றுக்கொண்டுள்ளார். 47 வயதாகும், சேத்தன் தனியார் நிறுவனம் ஒன்றில் எம்.டியாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறுவயதிலேயே சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எனது மகளுக்கு இருக்கும் ஆர்வம் என்னை பெருமையடையச் செய்துள்ளது. எனவே, அவள், கேட்டதும், திட்டத்திற்கு ஒப்புக்கொண்டேன்" என்றார்.
சபாஷ் பணி
ஆருனிகா கூறுகையில், "வெப்சைட் பற்றி கூறியதும், எனது தந்தை மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார். நானே எனது சொந்தக்காலில் நின்று கற்க வேண்டும் என்பதற்காக, வெவ்வேறு தனியார் நிறுவனங்களிடம் பேசி, ஸ்பான்சர்ஷிப் செய்ய உதவுகிறார். இனிமேல் சொந்த நிதியை கொண்டே வெப்சைட்டை நிர்வகிப்பேன்" என்றார். இந்த வெப்சைட்டை உருவாக்கியவரும், ஆருனிகாவிடம் பணம் வாங்கவில்லையாம். இந்த இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள சமூக நலன் பார்வை பாராட்டுக்குறியதே.