ஆந்திராவில் 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஹாஸ்டல் வார்டன்
குண்டூர்: ஆந்திராவில் 8ம் வகுப்பு மாணவியை விடுதி வார்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாலபட்டி கிராமத்தில் உள்ளது புனித மார்க்ஸ் குழந்தைகள் விடுதி. அந்த விடுதியில் வார்டனாக இருப்பவர் கே. ஜெயராஜ். பகுதிநேர பாதிரியாராகவும் உள்ளார். அவர் வார்டனாக உள்ள விடுதியில் 13 சிறுமிகள் மற்றும் 17 சிறுவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருபவர்கள்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8ம் வகுப்பு மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் விடுதிக்கு செல்ல மறுத்தார். பெற்றோர் காரணத்தை கேட்ட போது தான் வார்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெயராஜை தேடி வருகிறார்கள். அவர் மாணவியை இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.