“சகோதர, சகோதரிகள் நிம்மதியாக இறுதித் துயில் கொள்ளட்டும்”- பாக் பிஞ்சுகளுக்கு இந்திய பள்ளிகள் அஞ்சலி
டெல்லி: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பள்ளியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும், பலியான பள்ளி குழந்தைகளுக்காக இந்தியாவின் இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் காலை பிராத்தனை நேரத்தின்போது, 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.