ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் திட்டியதை மனதில் வைத்து பள்ளி மற்றும் காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக 11ம் வகுப்பு மாணவர் எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பயாக்பூர் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை அவர் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் அம்பரீஷ் திவாரி ராஜாவை திட்டியுள்ளார். இதையடுத்து அன்று இரவு ராஜா ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
அதில் உங்களையும் வைத்து பள்ளியை குண்டு வைத்து தகர்ப்பேன், ஜெய் பாக்தாதி என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த திவாரி எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. உடனே அவர் அந்த எஸ்.எம்.எஸ்.-ஐ போலீஸ் அதிகாரி பவன் சிங்கிற்கு அனுப்பினார். அவரும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் அவருக்கும் அதே செல்போன் எண்ணில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில், காவலாளிகளுடன் காவல் நிலையத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் விசாரணை நடத்தி எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண் ஒரு மாணவருடையது என்பதை கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே ராஜாவை அவரது தந்தையே அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆசிரியர் திட்டியதற்கு என் மகன் இவ்வாறு செய்துவிட்டான் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.