பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் 144 தடை உத்தரவு இல்லை.. உரிய பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர்
சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என கருதும் பெங்களூர் காவல்துறை, பரப்பன அக்ரஹாரா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. கூட்டம் சேர்ந்தால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடிப
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு குற்றவாளி, சசிகலா அடைக்கப்பட உள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார்.
மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார்.
கூடுதல் நகர உரிமையியல் அமர்வு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜரானதும், அவர்கள் மூவரும் தெற்கு பெங்களூரிலுள்ள (ஒசூர் ரோடு அருகே) பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுவர்.
இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அதிமுக தொண்டர்கள் திரளாக குழுமி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
இதே சூழல் இப்போதும் ஏற்பட்டால் சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என கருதும் பெங்களூர் காவல்துறை, பரப்பன அக்ரஹாரா பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்ததாக தகவல் வெளியானது. அதை போலீஸ் கமிஷனர் பிரவீண் சூட் மறுத்துள்ளார். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கூட்டம் சேர்ந்தால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடிப்பர்.