ஐ.டி. சட்டப்பிரிவு 66ஏ, 74 ஆகியவை ஏன் அவ்வளவு கொடூரமானவை?
டெல்லி: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 66 ஏ மற்றும் 74 ஆகியவை கொடூரமான சட்டங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்டர்நெட் பயனாளிகளை தண்டிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்த சட்டங்கள் பற்றி தனது நிலையை விளக்குமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பற்றி ஜோக்கை பரப்பிவிட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டபோது இந்த சட்டம் எவ்வளவு கொடூரமானது என்பது தெரிய வந்தது. இந்த சட்டப்பிரிவுகளில் கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட சட்டத்தை பார்த்தால் அதில் மாற்றம் இல்லை என்பதும், தொடர்ந்து கொடூரமாகவே உள்ளதும் தெரிகிறது. ஒழுகும் கூரையை பேண்ட் எய்ட் போட்டு அடைப்பது போல் உள்ளது இந்த சட்டம் என்று சைபர் சட்ட நிபுணர் பவன் டுக்கல் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66(ஏ) என்ன சொல்கிறது:
தொலைத்தொடர்பு சேவைகள் உள்ளிட்டவை மூலம் அநாகரீகமான மெசேஜ்கள் அனுப்பினால் தண்டனை: கம்ப்யூட்டர் அல்லது தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கீழ்காணும் வகையிலான மெசேஜ்கள் அனுப்புவது தண்டனைக்குரியது.
(அ) அச்சுறுத்தும் அல்லது தாக்கும் வகையில் உள்ள தகவல்கள்
(ஆ) பொய்யான தகவல்களை பிறரை காயப்படுத்த, எரிச்சலூட்ட, பகைக்காக, வெறுப்புக்காக அனுப்புவது
(இ) பிறரை எரிச்சலூட்ட, ஏமாற்ற பொய்யான தகவலை இமெயில் மூலம் அனுப்பினால் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப்பிரிவு 74:
சட்டப் பிரிவு 74ன் கீழ், இதுபோன்ற தகவல்களை அப்லோட் செய்யும் இணையதள உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
திருத்தம்
திருத்தப்பட்ட இந்த சட்டத்தின்படி தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ மற்றும் 74 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய துணை கமிஷனர் அல்லது ஐஜியிடம் அனுமதி பெற வேண்டும். இருப்பினும் இந்த சட்டங்களின் உண்மை தன்மை அப்படியே கொடூரமாகவே உள்ளது. இதனால் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்களை பாடாய்படுத்த முடியும். இந்த சட்டத்திருத்தத்தால் ஒரேயொரு நல்லது என்னவென்றால் வழக்குப்பதிவு செய்யும் முன்பு அது சரிபார்க்கப்படும். மமதா பானர்ஜி அல்லது ராஜ் தாக்கரே பற்றி ஜோக் போட்டால் அந்த வழக்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. அது குறித்து ஐ.ஜி. அல்லது எஸ்.ஐ. விசாரித்தாலும் வழக்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.
தொழில்நுட்ப சட்டம் 2000ம் படி இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை டிஎஸ்பி அளவில் உள்ள அதிகாரி விசாரிக்கலாம். 20008ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஐஜி அளவில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடியும்.
அரசியலமைப்பிற்கு எதிராக:
பிரிவு 66 ஏ இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது. அரசியலமைப்பு சட்டம் 19ன்படி அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால் சட்டப்பிரிவு 66ஏ அந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுக்கு எதிராக உள்ளது.
எப்படி?
இணையதளத்தில் ஏதாவது போஸ்ட் செய்யும் முன்பு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்கிறது தொழில்நுட்ப சட்டம். கொடூரமான சட்டம் அமலில் உள்ளதால் இணையதளத்தில் போஸ்ட் செய்வது பற்றி தீவிரமாக கண்காணிக்க வேண்டியதுள்ளது. இல்லை என்றால் ஏதாவது தலைவர்கள் பற்றி கருத்து தெரிவித்து சிக்கலில் சிக்கக்கூடும். ஆன்லைனில் தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ளாத வகையைச் சேர்ந்ததா என்று விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் மற்றொருவருக்கு சரியானதாக இருக்கும். இதை யார் முடிவு செய்ய. அப்படி இருக்கையில் இந்த தொழில்நுட்ப சட்டப்பிரிவுகள் கொடூரமானது தான்.