மதத்தை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது… தலைமை நீதிபதி தாக்கூர்
டெல்லி: தேர்தல்களின் போது மதத்தை பயன்படுத்தி வாக்கு கேட்பதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்காது என்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கூறியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிராவில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் முதல் இந்து அரசு அமைய உள்ளது என்று பிரச்சாரத்தின் போது கூறினார். இதுதொடர்பாக முரளி மனோகர் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி என்.பி.படேல் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா, இந்துத்துவா அல்லது இந்துமதம் என்பது ஒன்றுதான். அது மதத்தின் பெயரை குறிப்பது அல்ல. இந்திய துணை கண்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கும் சொல் என்று கூறி, ஜோஷிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதே போன்று ஜெயின் பிரிவினரான சுந்தர்லால் பட்வாவும் மத உணர்வை தூண்டும் வகையில் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, ராமர் கோயில் கட்டுவோம் என்று கூறி வாக்கு சேகரித்துத்துள்ளார். இதுதொடர்பான வழக்கை 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர், 7 பேர் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தாக்கூர் முன்னிலை வந்தது. அப்போது, இந்துக்களுக்கு வாக்களித்தால் முஸ்லிம்களுக்கு பத்வா விதிக்க முடியுமா? இது அனுமதிக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் நோக்கம் மதத்தை அடிப்படையாக கொள்ளக் கூடாது என்பதுதான். மேலும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, அப்படி ஒரு வேட்பாளர் செய்தார் என்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறினார்.
இந்த வழக்கு விசாரணை 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. நம்முடைய அரசியல் சாசன சட்டத்தின் சாராம்சமே மதச்சார்பின்மைதான். மதத்தையும் அரசியலையும் கலக்கக் கூடாது. மதச்சார்ப்பற்ற ஒரு நாட்டில் தேர்தல்களின் போது மதத்தை திணிக்கக் கூடாது என்று கூறினார்.
ஏற்கனவே இந்துயிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மதத்தை வரையறுப்பது மிகவும் கடினம் என்றும், இதற்கு முடிவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.