தேச துரேகிகளுக்கு யாரை பார்த்தாலும் தேச துரோகியாகவே தெரியும் - டெல்லியில் விளாசிய சீமான்
தேச துரோகிகளுக்கு யாரைப்பார்த்தாலும் தேச துரோகியாகவே தெரியும் என்று டெல்லியில் விவசாயிகள் மத்தியில் பேசிய சீமான் கூறியுள்ளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 17 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வாயில் கறுப்புத்துணி கட்டி விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று 3000 விவசாயிகள் டெல்லிக்கு பயணம் செய்கின்றனர். நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
டெல்லி சென்றுள்ள சீமான் இன்று போராட்ட களத்தில் விவசாயிகளுடன் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் யார் போராடினாலும் தேச துரோகி என்ற முத்திரை குத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தேச துரோகி
காமாலைக்கண்ணுக்கு யாரைப் பார்த்தாலும் மஞ்சளாகத்தான் தெரியும், தேச துரோகிகளுக்கு யாரைப்பார்த்தாலும் தேச துரோகியாகத்தான் தெரியும் என்றும் சீமான் குற்றம் சாட்டினார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் என்றும் சீமான் தெரிவித்தார்.
கடன் தள்ளுபடி
தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகள் கடனாளிகளாக இருக்கின்றனர். குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பிட உணவு இல்லை என்றும் சீமான் தெரிவித்தார். தமிழகம் கோரிய வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டம் வெடிக்கும்
ஜல்லிக்கட்டு புரட்சி போல மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் கூறிய சீமான் மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்காக போராடுவார்கள் என்றார்.
அக்கறையில்லை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்.கே. நகரில் பூத் ஏஜெண்ட் வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக குற்றம் சாட்டினார். சின்னத்தை காப்பாற்றவே இரு அணிகளும் அக்கறை காட்டுவதாகவும் விவசாயிகள் பிரச்சினையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் சீமான் குற்றம் சாட்டினார்.