விபரீத விளையாட்டு: ஓடும் ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுத்த 3 கல்லூரி மாணவர்கள் பலி
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் ஓடும் ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுத்த 3 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர்கள் யாகூப், இக்பால், அப்சல், அனீஷ். அவர்கள் 20 முதல் 22 வயதுக்குள் உள்ளவர்கள். அவர்கள் குடியரசு தினத்தன்று ஆக்ராவில் இருக்கும் காதல் சின்னமான தாஜ்மஹாலை காண காரில் கிளம்பினர்.
அவர்கள் ஆக்ரா செல்லும் வழியில் மதுராவில் உள்ள தண்டவாளம் அருகே திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு காரை நிறுத்தினர். ஓடும் ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட நண்பர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் தண்டவாளத்தில் நின்று ரயில் வரும் நேரத்தில் செல்ஃபி எடுத்தனர். அப்போது ரயில் மோதி யாகூப், இக்பால், அப்சல் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். இதில் அனீஷ் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர்களில் யாகூப் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தைச் சேர்ந்தவர். இக்பால் ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தைச் சேர்ந்தவர். அப்சல் டெல்லியைச் சேர்ந்தவர்.
அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.