சித்தராமையா எடுத்து முடிவு துணிச்சலானது.. எஸ்.எம்.கிருஷ்ணா ஆஹா.. ஓஹோ!
பெங்களூரு : காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்போவதில்லை என்ற முதல்வர் சித்தராமைய்யாவின் முடிவு துணிச்சலானது என்று கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். நதிநீர் பிரச்சினையில் சித்தராமைய்யா சரியான பாதையில் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 50 டிஎம்சி தண்ணீர் கேட்டு தமிழகம் தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. விநாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நாளை கர்நாடகா சட்டசபை கூடி காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறை வேற்ற முடிவு செய்யபட்டது.
இதையடுத்து முதல்வர் சித்தராமைய்யா முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உட்பட முக்கிய தலைவர்களை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து ஆலோசனை கேட்டு வருகிறார். கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் ஓராணியில் இணைந்துள்ளனர்.
காவிரி விவகாரம் குறித்து சித்தராமைய்யா உடன் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகா மாநிலத்தில்
பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்று கூறினார். காவிரி நதிநீர் விவகாரம் குறித்து அமைச்சர்ககளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் சித்தராமைய்யாவின் கருத்தை ஆதரிப்பதாக கூறினார்.
தமிழகத்திற்கு தண்ணீர் விடப்போவதில்லை என்ற சித்தராமைய்யாவின் முடிவு துணிச்சலானது என்று கூறிய எஸ்.எம். கிருஷ்ணா, நதிநீர் விவகாரத்தில் முதல்வர் சித்தராமைய்யா சரியான பாதையில்தான் செல்கிறார் என்றார். மக்களுக்கு எதிரான சட்டமாக இருந்தால் அதனை மாற்றி அமைக்கலாம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளதாக தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாளை சட்டசபையில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
சட்டசபையில் போடப்படும் தீர்மானங்களை மத்திய அரசிடம் தெரிவிப்போம். சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பேதமில்லாமல் ஓரணியில் நிற்கவேண்டும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக்கொண்டார்.