தூத்துக்குடியிலிருந்து வந்து, கன்னட பத்திரிகை உலகின் ஜாம்பவானாகிய பா.சு.மணி காலமானார்!
ெங்களூரு: பெங்களூரு நகரில் இருந்து வெளியாகும் ஒரே தமிழ் மாலை நாளிதழான தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியர் பா.சு.மணி காலமானார், அவருக்கு வயது 79.
தமிழர்கள் பெருவாரியாக பெங்களூருவில் குடியேறிக் கொண்டிருந்தபோது, தமிழுக்கென்று மாலைப் பத்திரிகை வேண்டும் என்ற எண்ணத்தில், 1964ம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகையை பெங்களூருவில் தொடங்கியவர் பா.சு.மணி. மணியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரமாகும்.
தினத்தந்தி, மாலை முரசு ஆகிய நாளிதழ்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு மாலை நாளிதழை தொடங்கும் யோசனையை கொடுத்தது. மேலும், முன்னாள் முதல்வர் காமராஜரும், மணியின் இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்ததாக கூறப்படுவதுண்டு.
தினச்சுடர் நாளிதழுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து 1982ல் சஞ்சேவாணி என்ற பெயரில், கன்னட மாலை பத்திரிகை தொடங்கினார். அதுதான், கன்னடத்தில் வெளியான முதல் மாலை பத்திரிகை என்பது சிறப்பு. தற்போது மேலும் சில கன்னட மாலை பத்திரிகைகளை சிலர் தொடங்கியிருந்தாலும், இன்றுவரை, சஞ்சேவாணி பத்திரிகைதான், மாலை பத்திரிகை விற்பனையில், கர்நாடகாவிலேயே முதல் இடத்திலுள்ளது.
தமிழ் மற்றும் கன்னட பத்திரிகை பலத்தை கொண்டு, கர்நாடகவாழ் தமிழர்களுக்கு இயன்ற அளவுக்கு மணி உதவிகளை செய்து வந்தார். அரசியல்வாதிகளின் நெருக்கத்தை, தமிழர்கள் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொண்டார். காவிரி நதிநீர் பங்கீட்டு கலவரத்தின்போது, பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலருக்கும் மணி, உதவிகரமாக இருந்ததுள்ளார்.
தமிழ் இலக்கத்தியத்தில் முதுகலை பட்டம், பிஎச்டி படித்திருந்த மணி, பல்வேறு சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார். ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு சர்.சி.வி.ராமன் நகரிலுள்ள தனது இல்லத்தில் மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு அழகு என்ற மனைவியும், அமுதவன் என்ற மகனும், பொருள், தேன்மொழி, அகிலா ஆகிய மகள்களும் உள்ளனர்.
பொதுமக்கள், அரசியல்பிரமுகர்கள், அமைச்சர்கள், மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடல், குயின்ஸ் ரோட்டிலுள்ள, தினச்சுடர் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை மதியம், இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.
மணியின் மறைவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.