விஞ்ஞானியை கொலை செய்து நகை, பொருட்கள் கொள்ளை - உ.பி.யில் விபரீதம்
பரேலி: உபியில் விஞ்ஞானி ஒருவரை கொலை செய்து கொள்ளையர்கள் நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி தீபக் சர்மாவின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் வீட்டிலிருந்த பணம் மற்றும் விலை மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். வீட்டு பணிப்பெண் கூறியதன் அடிப்படையில் 9 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் விஞ்ஞானியின் தாயையும், பணிப்பெண்ணையும் பாத்ரூமிலும் அடைத்து விட்டதாக கூறியுள்ளனர். இரு பெண்களும் பணிப்பெண்ணின் கணவரால்தான் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட விஞ்ஞானியின் மனைவி அவரது பெற்றோரைப் பார்க்கச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.