மாமனார் வீட்டில் புகுந்து 6 மாத குழந்தை, மனைவி உட்பட 7 பேர் மீது ஆசிட் ஊற்றிய மருமகன்
மீரட்: உத்திரப்பிரதேசத்தில் மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது ஆசிட் வீசிய நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசித்து வருபவர் நிசார். விவசாயியான இவரது மருமகன் சாஜித். வரதட்சணைப் பிரச்சினை காரணமாக சாஜித்தும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு 2 மணியளவில் நிசாரின் இல்லத்திற்குள் அதிரடியாக தனது நண்பருடன் நுழைந்துள்ளார் சாஜித். அப்போது அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் ஆசிட்டை வீசித் தாக்கியுள்ளனர்.
இதில், 6 மாத குழந்தை, சாஜித்தின் மனைவி உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு வரதட்சணைப் பிரச்சினை தான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சாஜித்தையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
வரதட்சணைப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.