கருவின் பாலினத்தை கண்டறியும் விளம்பரம்?: கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கில் கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசாப்ட் இந்தியா ஆகிய இணையதளங்களுக்கு எதிராக சாபு மாத்யூ ஜார்ஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்கள் மற்றும் தகவல்களை உலகம் முழுவதும் முடக்குமாறு இணையதளங்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டும், அதை கடைப்பிடிக்காமல், கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசாப்ட் இந்தியா ஆகிய இணையதளங்கள் இந்திய சட்டங்களை மீறி வருவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மூன்று இணையதளங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.