அவர் ஒரு ராக்கெட் ராணி.. சானியா மிர்சா சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டு ஷாருக்கான் புகழாரம்
ஹைதராபாத்: டென்னிஸ் ஸ்டார், சானியா மிர்சாவின் Ace Against Odds என்ற பெயரிலான சுய சரிதை புத்தகம் நேற்று ஹைதராபாத்தில் வெளியிடப்பட்டது. நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சானியா வாயில் இனிப்பு கொடுத்து, புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், மேரிகோம், பி.டி.உஷா, சானியா மிர்சா போன்ற பெண்கள் நமது நாட்டின் விளையாட்டு துறைக்கு அளப்பறிய பங்களிப்பை தந்துள்ளனர். இவர்களை போல பிற பெண்களும் முன்னேற தொடங்கியுள்ளனர்.
சானியா மிர்சா ராக்கெட்டின் (டென்னிஸ்) ராணி என்று அழைக்க தகுதியானவர். பெண்களுக்கு நாம் எவ்வளவு மதிப்பு தருகிறோமோ அந்த அளவுக்கு நாடு உயரும். இவ்வாறு ஷாருக் தெரிவித்தார்.
சானியா பேசுகையில், ஒரு போன் கால் செய்து, ஷாருக் நீங்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. வரமுடியுமா என்றுதான் கேட்டேன். ஷாருக் ஹைதராபாத் வந்து விட்டார். இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? என்றார்.
சானியாவின் சுய சரிதை புத்தகத்தில் டென்னிஸ் வாழ்க்கையில் தான்பட்ட கஷ்டங்கள், உலக மகளிர் இரட்டையர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி என்பது போன்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளது. முன்னணி புத்தக கடைகளில் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும்.