மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. "கிங் மேக்கராகும்" சரத் பவார்.. பாஜகவுக்கு ஆதரவு?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார்கள்? யார் யாருக்கு ஆதரவு தருவார்கள்? என்ற அனல் பறக்கும் விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணப்படுகின்றன.
எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?
பொதுவாக இந்த தேர்தலில் பாரதிய ஜனதா 110 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் 68, சிவசேனா 52, தேசியவாத காங்கிரஸ் 39, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 7 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் என்கின்றன கருத்துக் கணிப்புகள்
போராடுமா பாஜக?
சில கருத்து கணிப்புகள் அடிப்படையில் பார்த்தால் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வேறு ஒரு கட்சியின் தயவு தேவை என்ற நிலைமைதான் உருவாகக் கூடும். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க நிச்சயம் காங்கிரஸோ, சிவசேனாவோ உதவப் போவதில்லை.
சரத்பவார் ஆதரவு..
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவில் சில தொகுதிகளும் பாஜக ஆட்சி அமைக்க கை கொடுக்கப் போவதில்லை. இதனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸின் ஆதரவைத்தான் பாஜக பெற வேண்டியதிருக்கும்.
கூட்டுச் சதி- சவான்
சரத்பவாரைப் பொறுத்தவரையில் உறுதியாக அவர் பாஜகவை ஆதரிக்க மாட்டார் என்று சொல்லவும் முடியாது. 15 ஆண்டுகால காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்த போதே, முதல்வராக இருந்த பிரித்விராஜ் சவான், இது பாஜக- தேசியவாத காங்கிரஸின் கூட்டுச் சதி என்று விமர்சித்திருந்தார்.
பாஜக அரசில் பங்கேற்பு?
தற்போது வரை பாஜக அணிக்கு எதிராகவே சரத்பவார் பேசினாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைக்க உதவுவதுடன் அரசிலும் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தனிப்பெரும்பான்மைதான் -பாஜக
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியோ தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று மிக மிக நம்பிக்கையோடு இருக்கிறது. லோக்சபா தேர்தல் முடிவுகளைப் போலவே மகாராஷ்டிராவிலும் தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்கிறது பாஜக.
தேர்தல் முடிவுகள் வரும் வரை சரத்பவார்- பாஜக ஆதரவு எப்படி இருக்கும் என்பற விவாதமே மகாராஷ்டிரா அரசியலில் மேலோங்கி இருக்கும்!