மோடி அழைப்பை ஏற்று திருவனந்தபுரம் கடற்கரையை சுத்தம் செய்தார் சசிதரூர்! காங். தலைவர்கள் அதிர்ச்சி!!
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று திருவனந்தபுரம் கடற்கரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சுத்தம் செய்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நாட்டை சுத்தப்படுத்தும் வகையில் தூய்மை இந்தியா எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடெங்கும் உள்ள பல்வேறு துறை பிரபலங்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தெருக்களில் குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சசி தரூருக்கு அழைப்பும் எதிர்ப்பும்
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை சசிதரூரும் ஏற்றார். இதற்கு கேரள மாநில காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதவி பறிப்பு
அதோடு சசிதரூக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சசிதரூர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடற்கரை தூய்மை
இந்த நிலையில் திருவனந்தபுரம் விழிஞ்சம் கடற்கரைக்கு இன்று காலை 11 மணிக்கு வந்த சசிதரூர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவருடன் அந்த பகுதி மக்களும் சேர்ந்து கடற்கரை குப்பைகளை அகற்றினார்கள்.
அதிர்ச்சியில் காங்கிரஸ்
சசிதரூரின் இந்த செயல் கேரள காங்கிரஸ் தலைவர்களிடம் மட்டுமின்றி மேலிட தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.