50 வயது மும்பை ‘சொர்ணாக்கா’... பேரு பேபி... தொழில் கஞ்சா, அபின், ஹெராயின் விற்பனை!
மும்பை: தொழில் கஞ்சா, அபின், ஹெராயின் விற்பனை.. சொத்து மதிப்பு ரூ. 100 கோடி. இதுதான் மும்பையைக் கலக்கி வரும் பெண் போதைப் பொருள் தாதா சசிகலா ரமேஷ் படாங்கரின் கலக்கல் கதை.
50 வயதாகும் சசிகலாவின் செல்லப் பெயர் பேபியாம். இவரது பெயரைக் கேட்டாலே மும்பை போதைப் பொருள் கும்பல்களுக்கு குஷிதான். கடந்த 15 வருடமாக சசிகலா கும்பலின் அட்டகாசம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. இந்த கும்பலை அடக்க முடியாமல் மும்பை போலீஸார் திணறி வருகின்றனர்.
ஆனால் சாதாரண சசிகலாவை மிகப் பெரிய தாதா ரேஞ்சுக்கு மாற்றக் காரணமே இந்த மும்பை போலீஸார்தான். அவர்களில் சிலர்தான் சசிகலா இந்த அளவுக்கு வளர முக்கியக் காரணம். அவர்கள்தான் சசிகலாவை உருவாக்கியவர்களும் கூட.
இன்று ரூ. 100 கோடி சொத்துடன் அசத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. இவரைக் கைது செய்ய தற்போதுதான் மும்பை போலீஸார் சற்றே அக்கறை காட்டுகின்றனர். சமீபத்தில் சசிகலாவின் ரகசியக் கணவரான தர்மராஜ் கலோக்கே என்ற போலீஸ்காரரை கைது செய்தனர் போலீஸார். தற்போது சசிகலாவைத் தேடி வருகின்றனர்.
சசிகலாவின் கதை சுவாரஸ்யமானது. அவரது கணவரும், சகோதரரும் போதை அடிமை ஆவர். அவர்களுக்காக சசிகலா போதைப் பொருட்களைத் தேடிப் போய் கடைசியில் அதன் மார்க்கெட்டைப் பார்த்து போதைப் பொருள் விற்பனையில் குதித்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த போதைக் கும்பல்களிடம் இவர் போதைப் பொருட்களை வாங்குவார். அவர்களிடமிருந்து வாங்கி தனது வயிற்றில் வைத்து அவற்றைக் கட்டி சேலையால் மறைத்தபடி ரயில் மூலம் மும்பைக்குள் அவற்றைக் கொண்டு வருவார்.
இவர் மீது 2000 முதல் 2002 வரை 3 வழக்குகள் போடப்பட்டன. ஆனால் மூன்றிலும் வெளியே வந்து விட்டார். பின்னர் அவர் திடீரென போலீஸ் உளவாளியாக மாறினார்.
போதைப் பொருள் விற்பவர்கள் பலரை விவரமாக போலீஸாரிடம் மாட்டி விட்டார். இதற்காக அவர்களிடமிருந்து சில சலுகைகளைப் பெற்றார். கூடவே தனது தொழிலை பலப்படுத்திக் கொண்டார். இதற்கு மும்பை போலீஸார் பலர் உதவியாக இருந்துள்ளனர்.
இப்படியாக வளர்ந்து வந்த சசிகலா இன்று மிகப் பெரிய கோடீஸ்வரியாக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 100 கோடி என்கிறார்கள். ஆனால் இவரைப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது காவல்துறை.
ஒர்லி பகுதியில் இவருக்கு ரூ. 12 கோடி மதிப்பிலான அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு உள்ளதாம். அதேபோல ஒயின் ஷாப் ஒன்றையும் வைத்துள்ளார். புனே, கோரேகான் பார்க் பகுதியில் பெரிய வீடு உள்ளதாம்.
மும்பையில் இப்போது டாக் ஆப் தி டவுன் சசிகலாவும், அவர் சேர்த்து சொத்துக்களும்தான்.