ஷீனா கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மர்ம போன்... யார் செய்தது?
மும்பை: ஷீனா போரா மாயமானதாக போலீசாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த மர்ம அழைப்பைத் தொடர்ந்தே, இந்த விசாரணை சூடு பிடித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி, தனது முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் கணவர் மூலம் பிறந்த தனது மகள் மற்றும் மகனை, அஸ்ஸாமில் தன் பெற்றோர் பொறுப்பில் வளர்த்து வந்த இந்திராணி, சமுதாயத்தில் அவர்களை தனது தம்பி, தங்கை என அடையாளப் படுத்தி வந்தது தற்போது போலீசாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மர்ம போன்...
கடந்த 2012ம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்து, போலீசார் பழைய கேஸ் பைல்களைத் தூசி தட்டியதற்கு காரணம் ஒரு மர்ம போன் அழைப்பு தான் என்கிறார்கள் போலீசார்.
திடுக்கிடும் உண்மைகள்...
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், " கடந்த சில மாதங்களுக்கு முன் எங்களுக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில், இந்திராணியின் மகள் ஷீனா காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தான் திடுக்கிடும் இந்த உண்மைகள் வெளி வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணம்...
மேலும் மர்ம அழைப்பு வந்த போது, இந்திராணி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்ததாகவும், முன்கூட்டியே விசாரணை குறித்து தகவல் வெளியானால் அவர் தப்பி விடும் வாய்ப்பிருந்ததால் ரகசியமாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரகசிய கண்காணிப்பு...
கடந்த சில மாதங்களாக இந்திராணியையும், அவரது கார் டிரைவரையும் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், வேறொரு வழக்கில் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே ஷீனா வழக்கில் இந்திராணியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
டிரைவரின் வாக்குமூலம்...
முதலில் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ள இந்திராணி மறுத்ததாகவும், பின்னர் அவரின் முன்னிலையிலேயே டிரைவர் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து அவர் மனம் மாறி, குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் செய்தது?
ஆனால், மூன்று வருடங்களுக்குப் பிறகு ஷீனா குறித்த சந்தேகத்தைப் போலீசாருக்கு மர்ம போன் அழைப்பு மூலம் ஏற்படுத்தியது யார் என்பது குறித்த தகவல் இல்லை. போலீசாருக்கு போன் செய்த அந்த நபர் குறித்த மர்மம் நீடிக்கிறது.