இந்திராணி,சஞ்சீவ் மீது கொலை வழக்கு பதிவு... ஷீனா கொலைவழக்கில் திடுக் திருப்பங்கள்
ும்பை: டிவி சீரியல், திகில் கதைகள் போல திடுக்கிடும் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது ஷீனா போரா கொலை வழக்கு. ஷீனாவின் சகோதரர் மைக்கேலுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ராய் ஆகிய மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திராணிக்கு எப்போதுமே பணத்தின் மீதுதான் என்று அவரது முதல் கணவர் சித்தார்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார் இந்தியா, 'டிவி' சேனலின் முன்னாள் தலைமை நிர்வாகி, பீட்டர் முகர்ஜி. இவரின் இரண்டாவது மனைவி இந்திராணி, தன் முதல் கணவர் சித்தார்த் ராய் என்பவர் மூலம் பிறந்த மகளான, ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் திங்கட்கிழமையன்று, மும்பை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கட்டிப்பிடித்து அழுத இந்திராணி
நீதிமன்றத்திற்கு மூவரும் அழைத்து வரப்பட்ட உடன் அங்கிருந்த சஞ்சீவ் கன்னாவிற்கு பிறந்த தனது மகள் ‘விதி'யை கட்டிப்பிடித்து அழுதார் இந்திராணி. சஞ்சீவ் கன்னாவும் மகளை பார்த்து கண்கலங்க அந்த இடமே சீரியல் காட்சி போல காணப்பட்டது. செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுப்பதில் இருந்து தவிர்ப்பதற்காக குற்றவாளிகள் மூன்று பேரின் முகமும் கறுப்பு நிற முகமூடியால் மூடி அழைத்து வரப்பட்டனர்.
முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், 'இந்த கொலை வழக்கில், மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்; எனவே, மூன்று பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது' என, போலீசார்
தெரிவித்தனர். இதையடுத்து, மூன்று பேரின் போலீஸ் காவலை, இம்மாதம், 5ம் தேதி வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் சாந்த்கடே உத்தரவிட்டார்.
மொபைல் போன் எங்கே?
ஷீனா பயன்படுத்திய மொபைல் போனை போலீசார் தேடி வருகின்றனர். அதை கைப்பற்றினால், பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும். இந்த கொலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த, மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை முயற்சி வழக்கு
ஷீனாவின் சகோதரர் மைக்கேல், தனக்கு, தன் தாயார் இந்திராணி உள்ளிட்டோர், விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ராய் ஆகிய மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
போலீஸ் காவல்
தற்போது, மூன்று பேரிடமும், மேலும் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளதால், பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சித்தார்த் தாஸ் அதிர்ச்சி
இந்திராணி முகர்ஜியின் முதல்வர் கணவர் சித்தார்த் தாஸ் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்ற பின்னரும் இந்திராணிக்கு பணம் பற்றிய நினைப்புதான் அதிகம் இருந்தது என்று சித்தார்த் ராய் கூறியுள்ளார். அவளது பணத்தாசைக்கு என் மகள் பலியாகிவிட்டாள் என்றும் சித்தார்த் ராய் தெரிவித்துள்ளார்.
மூன்று கணவர்கள்
இதுநாள்வரை எங்கே இருந்தார் என்று தெரியாமல் இருந்த இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த் தாஸ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். கொலை வழக்கில் சிக்கிய இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியோ தனது மனைவியின் செய்த கொலை, அவர் மறைத்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.