ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான படையில் இணைந்து செயல்பட்டு தாயகம் திரும்பிய இளம் மதகுரு
லக்னோ: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான படையில் சேர்ந்து மசூதி உள்ளிட்டவற்றைக் காக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு தாயகம் திரும்பியுள்ளார் லக்னோவைச் சேர்ந்த இளைஞர். அவருக்கு ஷியா சமூகத்தினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷியா பிரிவைச் சேர்ந்த மெளலானா சையத் அப்பாஸ் நசீர் சயீத் அப்காதி என்ற இந்த இளைஞருக்கு வயது 28 ஆகிறது. பிஎச்டி மாணவர். பிரபலமான ஷியா மத குரு மெளலானா ஆகா ரூஹியின் மகன் ஆவார்.
இவர் நஜப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் ஈராக் சென்றார். அங்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போரில் பங்கேற்றார்.
தற்போது இவர் லக்னோ திரும்பியுள்ளார். அவருக்கு குடும்பத்தினரும், ஷியா சமூகத்தினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்து சந்தோஷமாக வரவேற்றனர். இவருக்காக ஷியா கல்லூரியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் மீண்டும் ஈராக்குக்குத் திரும்பிச் செல்லப் போவதாக கூறியுள்ளார் சையத்.
லக்னோவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷியா இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போரில் பங்கேற்க அரசிடம் அனுமதி கோரியுள்ளனராம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லையாம்.
தனது ஈராக் அனுபவம் குறித்து சையத் கூறுகையில், ஈராக் ராணுவத்தினர், முக்தடா அல் சதர் தலைமையில் பயிற்சி அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்தான் மக்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போராட விரும்புபவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.
எங்களுக்கு ஒரு மாத கால ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் இடம் பெற்றிருந்தவர். நான் மட்டும்தான் அதில் இந்தியாவைச் சேர்ந்தவன். பயிற்சிக்குப் பின்னர் பாக்தாத்திலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமர்ரா என்ற இடத்திற்கு எங்களை அனுப்பினர். அங்குள்ள மசூதி உள்ளிட்ட புனித இடங்களை ரம்ஜான் மாதத்தின்போது பாதுகாக்கும் பணி எங்களுக்கு அளிக்கப்பட்டது.
வெளிநாடு ஒன்றில் போய் ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவதால் சட்டப் பிரச்சினைகள் வருமா என்ற குழப்பம் எனது மனதில் வந்தது. இதனால்தான் நான் திரும்பி வந்து விட்டேன். இருப்பினும் நமது வீடு தாக்கப்பட்டால் யாரும் அமைதியாக இருக்க மாட்டோம். திருப்பித் தாக்கவே முயலுவோம். அரசிடம் அனுமதியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
உங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகும்போது எந்த விதமான பத்வாவும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது. இது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்றார் சையத்.
ஐஎஸ்ஐஎஸ் மீது சையத் கடும் அதிருப்தியுடன் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் சிறார்களைக் கொல்கிறார்கள். பெண்களைப் பிடித்து விற்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை. அதேபோல முஸ்லீம் மதத்திற்கு மாறாதவர்களையும் அவர்கள் கொல்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மனிதாபிமானம் இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் கொலை செய்கிறார்கள்.
கொலை செய்வதை மிகச் சாதாரணமாக செய்கிறார்கள். இது மனித குலத்திற்கே எதிரானதாகும். மதத்திற்கு விரோதமானதாகும்.
இப்போது நான் நன்கு பயிற்சி பெற்ற வீரனாக மாறியுள்ளேன். தேவைப்பட்டால் மீண்டும் 3 மாதத்தில் ஈராக் திரும்புவேன் என்றார் சையத்.