ஏர் இந்தியா ஊழியர்களை அடித்து துவைத்த சிவ சேனா எம்பி.. ஏர் இந்தியா மீதே வழக்கு போட்டு அட்டூழியம்
ஏர் இந்தியா ஊழியர்களை அடித்து துவைத்து அநியாயம் செய்த சிவ சேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட், தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போட்டுள்ளார்.
டெல்லி: ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை செருப்பால் சரமாரியாக தாக்கிய சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட், தற்போது அந்த நிறுவனத்தின் மீதே வழக்கு பதிவு செய்துள்ளார்.
சிவசேனாவைச் சேர்ந்த எம்பி ரவீந்திர கெய்க்வாட் டெல்லி செல்வதற்காக புனே விமானநிலையத்துக்கு வந்தார். எம்பி என்பதால் ஏர் இந்தியாவின் பிசினஸ் வகுப்பில் செல்வதற்கு அவருக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் செல்வதாக இருந்த விமானத்தின் அனைத்து இருக்கைகளும் எகனாமி வகுப்பில் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் வேறு வழியில்லாமல் அதே விமானத்தில் பயணம் செய்த ரவீந்திர கெய்க்வாட், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும் விமானத்தை விட்டு இறங்காமல் இருந்தார்.
எம்பியின் வெறியாட்டம்
தகவல் அறிந்து வந்த ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார், ரவீந்திர கெய்க்வாட்டை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர் சமாதானத்தை ஏற்க மறுத்த ரவீந்திர கெய்க்வாட் விமான நிறுவன அதிகாரியை சரமாரியாக அடித்தார். சட்டையை கிழித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் செருப்பால் அவரது கன்னத்தில் 25 முறை அடித்து அட்டூழியம் செய்தார்.
பெயர் நீக்கம்
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, எம்பி ரவீந்திர கெய்க்வாட் பெயர் விமானத்தில் பயணம் செய்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் கடுப்பான கெய்க்வாட் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், அதைப் பற்றி தனக்கு கவலை இல்லை என்று ஆணவத்தோடு பேசினார்.
கெய்க்வாட் வழக்கு
இந்நிலையில், எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். விமானத்தில் பயணம் செய்பவர்கள் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டது தொடர்பாகவும் மற்ற விமான நிறுவனங்களில் அவருடைய டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவ சேனா அமளி
விமானிகள் பயணிகள் பட்டியலில் இருந்து ரவீந்திர கெய்க்வாட் எம்பியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டது. எம்பியின் பெயர் நீக்கப்பட்ட சட்டத்திற்கு ரோதமான செயல் என்றும் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றம் சிவ சேனா கட்சியினர் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பினார்கள்.