மோகன் பகவத் அல்லது 'பசுமை புரட்சி தந்தை' சுவாமிநாதன்! சிவசேனையின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் இது
டெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டால், பசுமை புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் பெயரை பாஜக பரிசீலிக்காவிட்டால் சுவாமிநாதன் பெயரை நாங்கள் முன்மொழிய காரணம் அவர் விவசாயத்திற்காக செய்த பணிகள்தான். விவசாயம் தற்போது மோசமான நிலைக்கு போய்க் கொண்டுள்லது. இந்த நேரத்தில் சுவாமிநாதனுக்கு உயரிய பதவி கிடைத்தால் அது விவசாய வளர்ச்சிக்கு பயன்படும் என கருதுகிறோம்.
சுவாமிநாதன் உலகம் போற்றும் சிறந்த இந்திய விஞ்ஞானிகளில் ஒருவர். உணவு பஞ்சத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க பசுமை புரட்சி நடைபெற்றது. அதை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் இவராகும். அதேநேரம், இதற்காக ஒரு தரப்பினரால் இன்றளவும் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார் இவர். பசுமை புரட்சி மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தினார் என்பது அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று.
சுவாமிநாதனுக்கு தற்போது 91 வயதாகிறது என்பதால் அவரை குடியரசு தலைவர் போட்டியில் பாஜக பரிசீலிக்காது என்றே தெரிகிறது.