இட ஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதா? மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பை: ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்ற மத்திய அரசின் கருத்துக்கு சிவசேனா எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதிக்கப்பட்ட வர்க்க மக்களை காப்பாற்றும் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிராக உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே அவரை அக்கட்சிகள் தாக்கிப் பேசுகின்றன. அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டிய பாரதிய ஜனதாவும் கூட அவரது கருத்துக்கு தாங்கள் உடன்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில் பீகார் தேர்தலே காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து தொடர்பாக பாரதிய ஜனதாவின் அணுகுமுறை என்ன? என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த சட்டமேதை அம்பேத்கரும் இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அம்பேத்கரின் யோசனையை தற்போது மோகன் பகவத் ஆதரித்துள்ளார்.
இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.