பாகுபலி அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையாமே.. வெறும் "பில்டப்" தானாமே...?!
ஹைதராபாத்: நாடு முழுவதும் ஏற்படுத்திய மிகப் பெரிய "ஹைப்"புக்கு நேர் மாறாக பாகுபலி படம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், எதிர்பார்த்த அளவுக்கு இல்லையே என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அளவில் சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு படம் என்றால் அது பாகுபலிதான். ராஜமெளலி இயக்கியுள்ள இப்படம் மிகப் பெரிய அளவில் சிலாகித்துப் பேசப்பட்டு வருகிறது. யாரைப் பார்த்தாலும் பாகுபலி குறித்த பேச்சாகவே இருந்தது.
படத்தின் தொழில்நுட்ப அசத்தல்கள், நடிகர்கள் குறித்து சிலாகித்துப் பேசி வந்தனர். ஆனால் தற்போது எதிர்மறைப் பேச்சுக்கள் வர ஆரம்பித்துள்ளன.
ஜூலை 10ல் ரிலீஸ்
ஜூலை 10ம் தேதி பாகுபலி திரைக்கு வருகிறது. ராஜமெளலி இயக்க, ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என பல தென்னிந்தியத் திரைக் கலைஞர்கள் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார்.
4000 தியேட்டர்களில்
நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்படவுள்ளது. மிகப் பிரமாண்டமான முறையில் இப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
ஹைப் ஓவர் ஓவர்
ஆனால் இந்தப் படத்திற்குக் கொடுக்கப்பட்ட இவ்வளவு பெரிய ஹைப் மிக ஓவர் என்று திரையுலகிலேயே பேச ஆரம்பித்துள்ளனராம். காரணம் சென்சார் போர்டு உறுப்பினர்கள் சொன்னதாக வெளியான தகவலால்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
இப்படம் சென்சாருக்குப் போனபோது அதைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் சற்று ஏமாற்றமடைந்தனராம். நாங்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் படம் அப்படி இல்லையே என்று ஏமாற்றமாக கூறினார்களாம் உறுப்பினர்கள்.
படம் வரட்டும் பார்த்துக்கலாம்
தற்போது இந்த எதிர்மறைத் தகவல் வேகமாக பரவி வருவதால் படக் குழுவினரும் சற்று கலங்கியுள்ளனர். இருப்பினும் படத்தின் வசூலை இதை பாதிக்காது, ஏற்கனவே நிலவி வரும் ஹைப் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனராம்.
ஹைப் எப்பவுமே ஆரோக்கிய கேடுதான்!
பல பெரிய படங்கள், பெரியவர்களின் படங்கள் ஏகப்பட்ட ஹைப்புகளில் சிக்கி நொந்து நூடூல்ஸானதை திரையுலகம் கண்டுள்ளது. பாகுபலி அதிலிருந்து தப்புமா என்பதைப் படம் வந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.