சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் தூதர் கருத்து
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில் இனிமேலும் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் தரப்பில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் கூறுகையில், சியாச்சினில் நிலவி வரும் கடுமையான பருவநிலை காரணமாக இருநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதற்காக, நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
ஆசியாவின் இரண்டு அண்டை நாடுகளும் சியாச்சின் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம். இனிமேலும் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது மிகவும் முக்கியமான உடனடியான பிரச்சினை என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில், மிகப்பெரும் அச்சுறுத்தல் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. ஊகிக்க முடியாத, மிக அபாயகரமான பருவநிலைதான். உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இந்த வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.