சோனியாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு! ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து ஆலோசனை!!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா திடீரென சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இருவரும் ஆலோசித்ததாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற சித்தராமையா சோனியா காந்தியை தனியே சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது கர்நாடக மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சோனியாவிடம் ஆலோசனைகள சித்தராமையா கேட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சித்தராமையா, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.
சட்டத்துறையின் அறிக்கை கிடத்துடன் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். பொதுவாக மாநில விவகாரங்களில் கட்சி மேலிடம் தலையிடாது என்றார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பல்வேறு கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் சோனியாவுடனான சித்தராமையாவின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.