கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் மரணம்.. பெல்ஜியம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
பெங்களூர்: ஈரல், கணையம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக பெல்ஜியம் மருத்துவமனையில் உயிரிழந்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ். அவருக்கு வயது 39.
கர்நாடக முதல்வர் சித்தராமையா-பார்வதி தம்பதிக்கு, மொத்தம் இரு மகன்கள். இதில் மூத்த மகன் ராகேஷ். இளைய மகன் பெயர் யதீந்திரா.
ராகேஷுக்கு அரசியலில் ஈடுபாடு உண்டு என்றபோதிலும், நேரடியாக அவரை சித்தராமையா களமிறக்காமல் காத்திருந்தார். கன்னட சினிமா படம் ஒன்றிலும் ராகேஷ் நடித்துள்ளார். யதீந்திரா டாக்டராக உள்ளார்.
சுற்றுலா
கடந்த வாரம் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய ராகேஷ் அதன்பிறகு, ஐரோப்பிய நாடுகளில், நண்பர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகேஷுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிகிச்சை
உடனடியாக பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியை சித்தராமையா நாடிய நிலையில், அவரும் உரிய ஏற்பாடுகளை செய்தார்.
பெல்ஜியம் சென்ற முதல்வர்
பிரதமர் மோடியும், சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவைப்படும் உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். மகனை நேரில் பார்ப்பதற்காக, கடந்த வியாழக்கிழமை, சித்தராமையா பெல்ஜியம் புறப்பட்டு சென்றார்.
ரஜினி சிகிச்சை பெற்ற மருத்துவமனை
ராகேஷ் உடல்நிலை மோசமாகிய நிலையில், அவரை ரஜினிகாந்த், அம்பரீஷ் போன்ற பிரபலங்கள் சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஷிப்ட் செய்ய குடும்பத்தார் திட்டமிட்டிருந்தனர்.
மரணம்
இந்நிலையில், ராகேஷ் உடலின் முக்கிய பகுதிகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி ராகேஷ் இன்று உயிரிழந்தார். 15 வருடங்கள் முன்பு விபத்தில் கணயம் பகுதியில் அடிபட்டதால், உணவு கட்டுப்பாட்டில் ராகேஷ் இருந்ததாகவும், சுற்றுலாவின்போது கட்டுப்பாட்டை மீறியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாளை இறுதி சடங்கு
ராகேஷின் இறுதி சடங்கு பெங்களூரில் நாளை நடைபெற உள்ளது. அவரது உடலை பெங்களூர் கொண்டுவரும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதனிடையே ராகேஷ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராகேஷ் உடலை பெங்களூர் கொண்டுவர உரிய உதவி செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் பிரவேசம்
சித்தராமையா தனது மூத்த மகன் என்பதால் ராகேஷை அரசியல் வாரிசாக முன்னிருத்த திட்டமிட்டிருந்தார். 2013 சட்டசபை தேர்தலிலேயே தேர்தலில் போட்டியிட ராகேஷ் விரும்பியதாகவும், ஆனால் சித்தராமையா அவரை காத்திருக்க சொன்னதாகவும் தகவல்கள் உண்டு. மக்களால் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்., அவர்களை புகுத்த கூடாது என்று சித்தராமையா சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.