காவிரி.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் எண்ணம் இல்லை - சித்தராமையா
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என பிரதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு கன்னட அமைப்பினர், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவிரி விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டினார் சித்தராமையா.
அதன்படி நேற்று கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முதலில் சட்டமேலவைக் கூட்டம் நடைபெற்றது. விவாதத்தின்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற கருத்தையே பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போது கர்நாடக அணைகளில் 26.33 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தமிழகத்திற்கு 6 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீரை 27 ம் தேதி வரை திறந்து விட கோரி தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக கர்நாடக சட்டசபையில் நடந்த பேரவை மற்றும் மேலவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இக்கடித்ததுடன் இணைத்துள்ளேன்.
மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வரும் 27 ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி வரும் ஜன.2017 க்குள் இந்த நீரை வழங்க அனுமதியளித்து தீர்ப்பில் மாறுதல் செய்ய கோரி கர்நாடகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீரப்பை அவமதிக்கும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.