கலாமுக்கு இந்த சமையல் கலைஞர் செய்த மரியாதையைப் பாருங்கள்
ஹைதராபாத்: டெல்லியில் இன்று டிஆர்டிஓ பவன் அலுவலகத்தில் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சியை காலையில் வாக்கிங் போனோர் காண நேரிட்டது.
24 வயதான சுப்ரதோ மைத்தி என்பவர்தான் அனைவரையும் கவர்ந்த அந்த நபர். இவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பகுதி நேர சமையல் கலைஞராகவும் இருக்கிறார்.
மக்களின் மனம் கவர்ந்தவராக மட்டுமல்லாமல், தனது ஆதர்ச ஹீரோவாகவும் விளங்கிய கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்த அவர் அதை செய்த விதம் அனைவரையும் நெகிழ வைத்தது.
ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள இமாரத் ஆய்வு மைய வளாகத்தில் கலாமுக்கு சிலை எழுப்பினர். அந்த சிலையை இன்று காலையில் சுப்ரதோ சுத்தப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்தார்.
கலாம் பூங்கா
சிலை வைக்கப்பட்டுள்ள கார்டன் பகுதிக்கு தற்போது கலாம் பூங்கா என பெயரிட்டுள்ளனர். கலாம் இந்த மையத்திற்கு வரும்போதெல்லாம் இங்கு ஓய்வாக அமரத் தவறியதில்லை. அவருக்குப் பிடித்த இடமும் இதுவாகும்.
சிலைக்கு மரியாதை
இந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை சுப்ரதோ அவ்வப்போது சுத்தம் செய்வார். இன்று கலாமின் 84வது பிறந்த நாளையொட்டி அவர் சிலையைக் கழுவி சுத்தப்படுத்தி மாலையும் அணிவித்தார்.
தானே முன்வந்து
இதுகுறித்து அவர் கூறுகையில், கலாம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என்பதை நான் அறிவேன். இந்த இடத்தை சுத்தம் செய்வது என்று நேற்று இரவே முடிவெடுத்து விட்டேன். யாரும் இதைச் செய்யுமாறு என்னிடம் கூறவில்லை. நானாக செய்தேன். மற்றவர்கள் எழும் முன்பே இதைச் செய்ய முடிவெடுத்து முதல் வே்லையாக இதைச் செய்தேன்.
தோட்டத்து பூக்களை எடுத்து மாலை தொடுத்து
இங்குள்ள தோட்டத்தில் விளையும் பூக்களைப் பறித்து அதையே மாலையாக்கி சிலைக்கு அணிவித்தேன். நேற்று இரவே பூக்களை பறித்து எடுத்து மாலையாக்க வைத்து விட்டேன். எனது வேலைகளை முடித்த பிறகு இதைச் செய்தேன்.
பிரிட்ஜில் பத்திரமாக
மாலையை பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருந்தேன். இதன் மூலம் மாலை வாடாமல் இருந்தது. கலாம் சார்தான் எனது ஹீரோ. நமது இதயத்தில் ஒரு ராஜா போல வாழ்கிறார் அவர் என்றார் சுப்ரதோ.
மீனவரின் மகன்
சுப்ரதோ ஒடிஷா மாநிலம் தமரா என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு மீனவர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் சுப்ரதோ. டிஆர்டிஓவின் ஜேசி பட்டசார்யா கெஸ்ட் ஹவுஸில் சமையல் கலைஞராக பணியாற்றுகிறார்.
கோபமே வராது
கலாம் குறித்து சுப்ரதோ மேலும் கூறுகையில் கலாம் சாருக்கு கோபமே வராது. எப்போதும் புன்னகையுடன் அனைவரையும் வரவேற்பார். என்னிடம் மிகுந்த பாசத்துடன் பேசுவார். அவருக்கு ஒருமுறை உணவு பரிமாறினேன். எனது குடும்பம் குறித்து அப்போது விரிவாக விசாரித்தார். அவர் இறந்த அன்று இரவெல்லாம் நான் அழுது கொண்டிருந்தேன் என்றார் உருக்கமாக.
நினைவுப் புகைப்படம்
கலாமுடன் 2011ம் ஆண்டு எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை நினைவுப் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வருகிறார் சுப்ரதோ. இந்தப் படத்தை நான் எனது தாயாரிடம் காட்டியபோது அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதை தற்போது பிரேம் போட்டு எனது ஊரில் வீட்டில் வைத்துள்ளேன் என்று கூறினார் சுப்ரதோ.