செல்போன் சிம்கார்டு... டிரைவிங் லைசென்ஸ்க்கும் ஆதார் எண் அவசியம் - மத்திய அரசு
செல்போன் சிம் கார்டு, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
டெல்லி: மொபைல் அல்லது தொலைபேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு உடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய உத்தரவு ஒன்றை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
தீவிரவாதிகள் ஊடுருவல்
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், மொபைல்போன் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சீர்செய்யும் வகையிலும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதற்கான உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்த நடவடிக்கையை விரைந்து அமல்படுத்தவும் அறிவுறுத்தியது.
ஆதார் எண் கட்டாயம்
இதையேற்று, தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை தொடங்குவதாகக் கூறியுள்ளன. மேலும், புதியதாக சிம் கார்டு வாங்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துண்டிக்கப்படும்
ஏதேனும் ஒரு புகைப்பட ஆதாரம் சமர்ப்பித்தால் போதும் என்றிருந்த நிலை மாறி, இனி மொபைல்போன் பயன்படுத்தவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் எண் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. மொபைல்போன் வாடிக்கையாளகர்கள் அடுத்த ஓராண்டுக்குள் ஆதார் இணைக்காவிட்டால் அவர்களது தொடர்பு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரைவிங் லைசென்ஸ்
அதே போல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய உத்தரவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவது, புதுப்பிப்பது ஆகியவற்றிற்கும் ஆதார் அவசியம் என அதில் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் முதல் அமல்
போக்குவரத்து குற்றங்கள், வாகன மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளையும் தடுக்கும் வகையில் இந்த ஆதார் இணைப்பு அவசியமாகிறது என்றும் அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை வருகிற அக்டோபர் முதல் முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.