தென்னிந்தியாவில் சதிவேலை அரங்கேற்ற சிமி தீவிரவாதிகள் திட்டம்... 'திடுக்' தகவல்
டெல்லி: மத்திய பிரதேச மாநில சிறையில் இருந்து தப்பி வந்த சிமி தீவிரவாதிகளில் 2 பேர் பலியாகி விட்ட நிலையில் 3 பேர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். தென்னிந்தியாவில் சதி வேலைகளை நிகழ்த்த அவர்கள் திட்டம் தீட்டிவருவதாக தேசிய குற்றப்புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தலைமறைவாக உள்ள சிமி தீவிரவாதிகளைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது அஜாஜூதீன், முகமது அஸ்லாம் ஆகிய 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதலில் இவர்கள் இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இவர்கள் 2 பேரும் சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கர தீவிரவாதிகள் என்பது அம்பலமானது.
சென்ட்ரலில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியதில் இவர்கள் இருவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியானது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிமி தீவிரவாத இயக்கத்தில் அபுபைசல் என்ற தீவிரவாதி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவன் ஆவான். இவனது கட்டுப்பாட்டின் கீழ் இளைஞர்கள் பலர் தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை அங்கு ‘அபு பைசல் கேங்' என்று அழைப்பார்கள்.
இந்நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், சிலர் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முகமது அஜாஜூதீன், முகமது அஸ்லாம், அஜ்மத்கான், ஜாகீர் உசேன், மெகபூப் ஆகிய 5 பேர், கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பினர். இவர்கள் சிறையில் இருந்து தப்பிச்செல்வதற்கு அபுபைசல் பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளான்.
20 வழக்குகள்
சிறையில் இருந்து தப்பிச்சென்ற 5 தீவிரவாதிகள் மீதும், வங்கிகளில் கொள்ளை அடித்தல், வழிப்பறி, போலீஸ்காரர்களை கொலை செய்தது உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன.
எம்.பி. கொல்லப்பட்ட வழக்கு
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி. பிரமோத்திவாரி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருந்தது. இதனால் 5 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, மத்திய பிரதேச போலீசார் நாடு முழுவதும் தேடி வந்தனர்.
தென்னிந்தியாவில் சதிச்செயல்
இந்த தீவிரவாதிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் எல்லைப்பகுதிகளில் சிலீப்பர் செல்களை அமைத்து சதிவேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானாவில் பதுங்கல்
இந்நிலையில் தான் தெலுங்கானாவில் பதுங்கி இருந்த சிமி தீவிரவாதிகளான முகமது அஜாஜூதீன், முகமது அஸ்லாமும், அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முதலில் இவர்களை வழிப்பறி கொள்ளையர்கள் என்று தான் தெலுங்கானா போலீசார் கூறினார்கள்.
ம.பி.போலீசார் உறுதி
ஆனால் மத்திய பிரதேச போலீசார் தெலுங்கானாவுக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை பார்த்து இவர்கள் சிமி தீவிரவாதிகள் என்று கூறினர். இதை கேட்டு, தெலுங்கானா போலீசார் ஆடிப்போய் விட்டனர்.
குண்டுவெடிப்பு சம்பவங்களில்
சென்ட்ரல் ரயில் நிலை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலும் இந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே போலீசார் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் போர்வையில்
சிறையில் இருந்து தப்பியவர்களின் போட்டோக்களை சென்ட்ரல் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பயணிகளிடம் காட்டியும் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது என்கவுண்டரில் பலியான 2 தீவிரவாதிகளும், பயணிகள் போல ரயிலில் பயணம் செய்திருப்பதும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நீடித்து வந்த மர்மத்தை தெலுங்கானா போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
எல்லைப்பகுதியில் பதுங்கல்
இவர்கள் விஜயவாடாவிற்கு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஏனெனில் விஜயாவாடா நகரம் சிமி தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது. தமிழகம், பெங்களூருவில் குண்டுவெடிப்பு சதிச்செயல்களை அரங்கேற்றிவிட்டு அவர்கள் எளிதாக ஆந்திராவின் எல்லையோரப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விடுவதாக தேசிய குற்றப்புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மூவரை தேடும் பணி
இதனிடையே ம.பி சிறையில் இருந்து 5 பேர் தப்பிய நிலையில் 2 பேர் தெலுங்கானாவில் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மூவரும் தென்னிந்தியாவில்தான் பதுங்கியிருக்கக் கூடும் என்றும் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்புத்துறை அதிகாரிகள் நமது ஒன் இந்தியா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.