இனி நிம்மதியாக சாவேன்.. சிங்கூர் தீர்ப்பு குறித்து மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
கொல்கத்தா: 2006ம் ஆண்டு டாடா தொழிற்சாலைக்காக சிங்கூரில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையடுத்து, இனி நிம்மதியாக சாவேன் என்றும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது என்றும் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள சிங்கூர் மாவட்டத்தில் டாடா நானோ கார் தொழிற்சாலையை அமைக்க, 1000 ஏக்கர் விவசாய நிலத்தை அம்மாநில அரசு கையகப்படுத்தி டாடா நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இதனை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்களும், விவசாய மக்களும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு சார்பான தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம்.
இதனையடுத்து, 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை பாதிக்கப்பட்டோர் சார்பில் அளிக்கப்பட்டது. இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேற்குவங்க அரசு சிங்கூரில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த தீர்ப்பிற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன். உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதனை துர்கா பூஜை கொண்டாடுவது போன்று சிங்கூர் மக்கள் கொண்டாட வேண்டும். இனி நான் நிம்மதியாக சாவேன் என்று மம்தா உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்துள்ளார்.