மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளரானார் சீதாராம் எச்சூரி
விசாகப்பட்டணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் அக்கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவிக்கு கேரளாவைச் சேர்ந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோருக்கு இடையே போட்டி காணப்பட்டது.
இருப்பினும் இன்று 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் கடைசி நேரத்தில் ராமச்சந்திரன் பிள்ளை போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து எச்சூரி பெயரை பிள்ளையும், தற்போதைய பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத்தும் இணைந்து முன்மொழிந்தனர். இதையடுத்து அவர் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக உள்ள எச்சூரி அக்கட்சியின் 5வது பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார். பிரகாஷ் காரத் 3 முறை பொதுச் செயலாளர் பதவி வகித்து ஓய்வு பெறுகிறார்.