திரிபுராவிலும் 'சித்து' விளையாட்டு.. 6 திரிணாமுல் எம்.எல்.ஏ.க்களை அலேக்காக அள்ளியது பாஜக
திரிபுராவில் பாஜக சித்து விளையாட்டை காட்டிவிட்டது. 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு சட்டசபைக்குள் நுழைந்துவிட்டது.
அகர்தலா: கட்சிகளை உடைத்து கொல்லைப்புற வழியாக மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கியிருக்கிறது திரிபுரா. அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துவிட்டது பாஜக.
திரிபுரா சட்டசபைக்கு 2013-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 50-ல் மார்க்சிஸ்ட் கட்சி வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.
காங்கிரஸ் கட்சி 10 இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதனிடையே 2016-ல் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கோலோச்சி வந்தது. அஸ்ஸாமில் காங்கிரஸை உடைத்து மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
நாகாலாந்து, மணிப்பூரில்...
இதேபோல் நாகலாந்தில் ஆளும் நாகா முன்னணியில் சடுகுடு விளையாடி புதிய அரசில் தொற்றிக் கொண்டது பாஜக. மணிப்பூரிலும் காங்கிரஸை உடைத்து ஆட்சியை பிடித்தது பாஜக.
திரிபுராவுக்கு குறி
திரிபுராவுக்கும் நீண்டகாலமாகவே இலக்கு வைத்து வந்தது பாஜக. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள், பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த 6 எம்.எல்.ஏக்களையும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக நீக்கினார்.
பாஜகவில் ஐக்கியம்
மமதாவால் நீக்கப்பட்ட 6 எம்.எல்.ஏக்களும் சனிக்கிழமையன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர். இந்த 6 எம்.எல்.ஏக்களும் நேற்று முறைப்படி பாஜகவில் இணைந்தனர். அகர்தலாவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட நிகழ்ச்சியில் 6 எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தனர்.
திரிபுரா சட்டசபையில் பாஜக
இதனைத் தொடர்ந்து திரிபுரா மாநில சட்டசபையில் பாஜகவும் தனது கணக்கைத் தொடங்கிவிட்டது. தற்போது திரிபுரா மாநில சட்டசபையில் பாஜகவுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். திரிபுராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.