.பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி.. உ.பி.யில் 16 நோயாளிகள் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழகத்தில் 16 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுகலை மாணவர் சேர்க்கையில் பழைய முறையை ரத்து செய்துவிட்டு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாநில அரசு கடந்த மே 27 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வு தகுதி பட்டியல் அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போதிய மருத்துவ வசதியின்றி 16 நோயாளிகள் அந்த மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மிக முக்கியமான நோயாளிகளுக்கு மட்டும் மூத்த மருத்துவர்களின் உதவியோடு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக புதன்கிழமை நடத்தப்பட இருந்த சுமார் 24- க்கும் அதிகமான அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு மனிதாபிமான அடிப்படையில் பணிக்கு திரும்புமாறு மாநில ஆளுநர் ராம் நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.