டெல்லியில் சேலைச் சண்டை... அரசுப் பணத்தில் ரூ 8 லட்சத்துக்கு சேலை வாங்கினாரா ஸ்மிருதி இராணி?
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அரசுக்கு சொந்தமான கடைகளில் ரூ8 லட்சத்துக்கு சேலைகளை வாங்கிவிட்டு ஜவுளித்துறையின் கணக்கில் சேர்க்க சொல்வதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து ஜவுளித்துறை செயலர் ரேஷ்மி வர்மா, பிரதமர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அடிபட்டுக் கொண்டிருந்தார் ஸ்மிருதி இரானி. பின்னர் அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் ஜவுளிதுறைக்கு மாற்றப்பட்டார்.
ஜவுளித்துறை அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்தே அத்துறையின் செயலர் ரேஷ்மி வர்மாவுடன் ஸ்மிருதி இரானிக்கு அக்கப்போர்தான்... அண்மையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி, ரூ8 லட்சம் மதிப்புள்ள சேலைகளையும் விநாயகர் சிலையையும் வாங்கியுள்ளார்.
ஆனால் இதற்கான பணத்தை கொடுக்காமல் ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். விடுவாரா ரேஷ்மி வர்மா...
மத்திய அமைச்சரின் சொந்த செலவுகளுக்கு அரசு பணத்தை வழங்க முடியாது எனக் கூறிவிட்டார். அத்துடன் விடவில்லை... பிரதமர் அலுவலகத்துக்கும் புகாரைத் தட்டிவிட்டார் ரேஷ்மி வர்மா.
ஆனால் இந்த புகாரை அடியோடு மறுத்துள்ள ஸ்மிருதி இரானி இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறியுள்ளார்.
எங்கே போனாலும் சர்ச்ச்சை!