மோடி பிரதமர் தான்.. அவர் ஒன்றும் மன்னர் இல்லை - சோனியா கடும் தாக்கு
ரேபரேலி: தனது மருகமன் லண்டன் நகரில் சொத்து வாங்கியதாகக் கூறப்படும் புகார் குறித்து, அரசு நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி கூறினார். மேலும், நரேந்திர மோடி பிரதமர்தான், அவர் ஒன்றும் மன்னர் இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி நேற்று தனது ரேபரேலி தொகுதிக்கு சென்றார். அப்போது சோனியா காந்தியிடம், ராபர்ட் வதோரா மீதான புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, ராபர்ட் வதோரா மீதான புகார்கள் என்பது 'காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்ற பாரதீய ஜனதா கட்சியின் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
ஆளும் பாஜகவினர் காங்கிரஸ் மீது நாள்தோறும் பொய் புகார்களை கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர், பின்னர் அதை திரும்பப் பெறுவது பாஜகவின் வாடிக்கையாவிட்டது என குற்றம் சுமத்தினார்.
ஆயுத விற்பனையாளர் ஒருவருடன் வதோராவுக்குள்ள தொடர்பு, மத்திய லண்டனில் இருக்கும் ஒரு வீட்டுக்கு வதோரா உரிமையாளர் என்ற விவகாரம் பற்றிய வருமான வரித்துறையினர் விசாரணை ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த விவகாரத்தில் உண்மை இருப்பதாக கருதினால் மத்திய அரசு பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று கூறினார்.
மேலும் மத்தியில் இரண்டாண்டு ஆட்சி நிறைவடைந்ததற்கு, பிரம்மாண்ட விழா நடத்துகின்றனர். இதுபோன்று, இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. மோடி, நாட்டின் பிரதமர் தான்; மன்னர் அல்ல. நாடு முழுவதும், வறட்சி தாண்டவமாடுகிறது. வறுமை அதிகளவில் உள்ளது. விவசாயிகள், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், ஆடம்பர விழாக்கள் நடத்துவது அவசியமா? இவ்வாறு சோனியா கூறினார்.