டெல்லியில் சோனியா, ராகுல், பிரியங்கா.. வெளிநாடு போனது எதற்காக? மர்மம் நீடிப்பு!
டெல்லி: வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துடன் டெல்லி திரும்பியுள்ளார். இருப்பினும் சோனியா காந்தி குடும்பத்துடன் எந்த நாட்டுக்கு எதற்கு சென்றார் என்ற மர்மம் தொடர்கிறது.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு ஒன்றுக்குப் போனார். சுமார் 50 நாட்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு அவர் நாடு திரும்பினார். அவர் எந்த நாட்டுக்குப் போனார்? எதற்காக இந்த திடீர் தலைமறைவு ஓய்வு பயணம்? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.
இந்நிலையில் கடந்த வாரமும் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்றனர். அவர்களைத் தொடர்ந்து ராகுல் காந்தியும் வெளிநாடு புறப்பட்டுச் சென்றனர்.
ஒட்டுமொத்த சோனியா குடும்பமே எந்த நாட்டுக்குப் போனது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் திருமண விஷயமாகத்தான் வெளிநாடு சென்றுள்ளனர் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சோனியா, பிரியங்கா, ராகுல் அனைவரும் தற்போது டெல்லி திரும்பியுள்ளனர். எனினும் இவர்களது வெளிநாட்டு பயணத்துக்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.