ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் லஞ்சம் பெற்றது சோனியாதான்.... சு.சுவாமி 'பொளேர்'
டெல்லி: இத்தாலியில் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் லஞ்சம் பெற்றார் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு இறுதியில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்காக இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
பின்னர் அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்த இத்தாலி நீதிமன்றம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதை உறுதிசெய்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இதுதொடர்பான விசாரணை சூடுபிடித்து உள்ளது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கிப் போட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி அளித்த சுப்பிரமணியன் சுவாமி, விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த்தத்தில் சோனியா காந்தி லஞ்சம் பெற்றுள்ளார். இந்த ஒப்பந்தத்துக்காக வழங்கப்பட்ட லஞ்சப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. லஞ்சம் பெற்ற சோனியா காந்தி, அந்த பணத்தை ஜெனிவா மற்றும் சூரிச் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளார் என்றார்.,