பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம் தான் இந்தியாவின் பலம்.. பிரணாப் முகர்ஜி
டெல்லி: பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம் தான் இந்தியாவின் பலம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் நாளை நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ளார்.
இதையொட்டி நாட்டு மக்களுக்காக பிரணாப் முகர்ஜி இன்று உரையாற்றினார். அவரது உரையில், புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காக கடமையாற்றியுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன்.
நாட்டிற்காக கொடுத்ததை விட நான் பெற்றுக்கொண்டதே அதிகம். சிறப்பாக பணியாற்றியதை நான் சொல்வதை விட காலம் சொல்வது தான் சரியாக இருக்கும். அனைத்துவிதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம் தான் இந்தியாவின் பலம். நாடாளுமன்றம் எனது கோயில்; அரசியலமைப்பு எனது புனித நூலாகும் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் எனது பணியை நிறைவு செய்கிறேன். இவ்வாறு உரையாற்றினார்.