தென்னிந்திய கோவில்களை குறிவைக்கும் தீவிரவாத அமைப்புகள்: ஐ.பி. எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் பதுங்கியுள்ள தீவிரவாத அமைப்புகள் தென்னிந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பதுங்கியுள்ள சிமி ( ஸ்டூடன்ஸ் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா) என்ற தீவிரவாத குழுக்கள் கோவில்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள புலனாய்வுத்துறை முக்கியமான கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கனகதுர்கா ஆலயத்திலும் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தீவிரவாதி
தமிழகத்தில் நாசவேலைகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து ஊடுருவிய தீவிரவாதி கடந்த ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையில் நடத்தப்பட்ட நாசவேலைகளைப்போல சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கோவிலுக்கு ஏன் குறி?
தீவிரவாத அமைப்புகள் ஏன் இந்து கோவில்களை குறிவைத்து தாக்குகின்றன? என்ற கேள்வி எழாமல் இல்லை. கோவில் என்பது உணர்வுப்பூர்வமான தலம். இதனை தாக்குவதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது தீவிரவாத குழுக்களின் நம்பிக்கையாகும்.
தகர்க்க திட்டம்
சிமி அமைப்பினர் மட்டுமல்லாது இன்னும் சில தீவிரவாத குழுக்களும் தென்னிந்திய கோவில்களில் நாசவேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நமது ஒன்இந்தியா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
பத்மநாபசுவாமி கோவிலுக்கு அச்சுறுத்தல்
கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் ஞாயிறன்று 5 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்களை களவாடுவதற்காக வைக்கப்பட்ட குறியா என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனகதுர்கா கோவிலுக்கு அச்சுறுத்தல்
மத்தியப் பிரதேச மாநிலம், காண்ட்வா சிறைச்சாலையில் இருந்து தப்பிய சில தீவிரவாதிகள் விஜயவாடாவில் தங்கி இருக்கலாம் என உளவு துறையினரின் ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதலால், இவர்கள் திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் நாச வேலையில் ஈடுபடலாம் என்றும் எச்சரித்து உள்ளனர்.
ஆயுதம் ஏந்திய போலீசார்
இதனால் இந்தக் கோயிலில் தற்போது ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பக்தரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள், போலீஸ் துறையினர் ஆந்திர அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் விஜய வாடாவில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும், மற்ற கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.