யாகூப் மேமன் மனைவிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க சொன்ன சமாஜ்வாடி பிரமுகர்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் மனைவி ரஹீனுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று மும்பை சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் கோஷி விடுத்த கோரிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோஷியின் கட்சிப் பதவி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு கடந்த 30-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யாகூப் மேமன் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால் ஊடகங்கள் இதை பதிவு செய்ய மும்பை காவல்துறை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மும்பை கிளை துணைத் தலைவர் எம்.எஃப். கோஷி, யாகூப் மேமனின் மனைவி ரஹீனுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மும்பை தலைவருமான அபு அசீம் ஆஸ்மி, கோஷியிடம் விளக்கம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கோஷியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.