பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா.. ரேஸ் புறாவாமே!
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா, உளவுப் புறா அல்ல, அது ரேஸ் புறா என்று கூறுகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்த புறா சிக்கியது. அந்தப் புறாவி்ன் இறக்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இடம் பெற்றிருந்த எழுத்துக்களை வைத்து அது உளவுப் புறாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் தற்போது அது பந்தப் புறாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அந்தப் புறாவுக்கு தீனி கொடுத்துப் பராமரித்து வருகிறதாம் பதன்கோட் போலீஸ்.
இந்தப் புறா உளவுப் புறாவாக இருந்தால் அதை அனுப்பியது யார் என்பதை அறிய போலீஸாரும், உளவுப் பிரிவினரும் முயற்சிகள் எடுப்பார்கள். ஒரு வேளை அது பந்தப் புறாதான் என்பது உறுதியானால் அதை உரிய காப்பகத்தில் ஒப்படைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
இந்தப் புறா உளவுப் புறாவா அல்லது பந்தப் புறாவா என்பதை அறிய பதன்கோட் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி அது உளவுப் புறா என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அறிகுறியும் இல்லை.
இருப்பினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அந்தப் புறாவுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அதன் உடலில் எந்தப் பகுதியிலும் சிப் எதுவும் பொருத்தப்படவில்லை. மேலும் நுன்னிய கேமரா உள்ளிட்ட எந்த மின்னணுப் பொருட்களும் கிடைக்கவில்லை. அதன் இறக்கையில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் மட்டுமே சந்தேகத்திற்கிடமாக உள்ளன. மற்றபடி அந்தப் புறாவிடமிருந்து எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்கவில்லை.
புறாவின் இறக்கையில் இடம் பெற்றிருந்த எண்கள், தொலைபேசி எண்ணாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது தொலைபேசி எண் அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது.
அந்த எழுத்துக்கள் உருதில் உள்ளன. தெளிவாகவும் இல்லை. எனவே அதன் இறக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புரியவில்லை.
இப்படி பாகிஸ்தானிலிருந்து புறா வந்து சிக்குவது இது முதல் முறையல்ல. மார்ச் 29ம் தேதியும் கூட இதேபோல ஒரு புறா வந்தது. அந்தப் புறாவானது, குஜராத் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிக்கியது. விசாரணையில் அது பந்தப் புறா வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இருப்பினும் அந்தப் புறாவின் உடலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. உருது வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
அந்தப் புறாவின் காலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் 28733 என்ற எண்ணும் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ரசுல் உல் அல்லா என்ற எழுத்தும் காணப்பட்டது.