சொந்தநாட்டு விவசாயிகளை நிர்வாணமாக்கி... சிங்களத்து வறட்சிக்காக ரத்தக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசு!
சொந்த நாட்டு விவசாயிகளை நிர்வாணமாக்கி அவமதிக்கும் மோடியின் பாஜக அரசு சிங்களவர் வறட்சிக்காக துடியாய் துடிக்கிறது.
டெல்லி: இந்திய தேசத்தின் குடிமக்களான தமிழகத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நிர்வாணமாக போராட்டம் நடத்தும் நேரத்தில்தான் இலங்கை வாழ் சிங்கள மக்களின் வறட்சியைப் போக்க 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்புகிறதாம் தமிழர் விரோத மோடி தலைமையிலான பாஜக.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம்... படுபாதகங்கள்.. ஒன்றா இரண்டா... எத்தனை எத்தனை துரோகங்கள்? ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய பாஜக மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்றது.
ஆண்டுகள் உருண்டோடின... துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என திமிர்த்தனம் காட்டுகிறது மோடியின் பாஜக அரசு.
பாலைவனமாக்க
கேரளா அணை கட்ட, கர்நாடகா அணை, ஆந்திரா அணை கட்ட அனுமதிகளை வாரி இறைத்து தமிழர் நிலங்களை பாலைவனமாக்கிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடியின் பாஜக அரசு. இன்னொரும் நாசகார மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழ் மண்ணின் எதிர்ப்புக்கும் பின்னரும் திணித்து தெனாவெட்டைக் காட்டுகிறது மோடியின் பாஜக அரசு.
நீங்கா மீனவர் துயரம்
நித்தம் நித்தம் வங்கக் கடலில் செத்து பிழைத்து திரும்புகிற தமிழக மீனவர்களின் துயரத்தைத் துடைக்க துளியும் விருப்பமில்லாத துரோகத்தால் இழைக்கப்பட்டதுதான் மோடியின் பாஜக அரசு. வரலாறு காணாத வறட்சியால் 300 விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர் தமிழ் மண்ணில்.
டெல்லி போராட்டம்
இந்த பெருந்துயரைத் துடைக்க கை நீட்டி உதவ மறுக்கிறது மோடியின் பாஜக அரசு. தங்களது உரிமைகளுக்கு தலைநகர் டெல்லியிலே முகாமிட்டு மாத கணக்கில் போராடும் தமிழகத்து விவசாயிகளை ஏறெடுத்தும் பார்த்த இரக்கமற்ற கொடியவர்களின் கூடாரமாக இருக்கிறது மோடியின் மத்திய பாஜக அரசு.
நிர்வாண போராட்டம்
போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்த, முடிவுக்கு கொண்டுவர எத்தனை எத்தனைதான் குறுக்கு வழிகள்... இதோ டெல்லித் தெருக்களில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக உருண்டு புரளும் பெருங்கொடுமைக்கு காரணமே மோடியின் மத்திய பாஜக அரசுதான்.. சொந்த நாட்டு குடிமகன் வாழ்வுக்கு வழிகேட்டு தலைநகர் டெல்லியிலே நிர்வாணமாக புரண்டு கொண்டிருக்கிறான்..
சிங்களத்துக்கு உதவி
ஆனால் வஞ்சக மோடி அரசோ, சிங்களத்தான் வறட்சியில் வாடுகிறானாம்... அந்த தேசத்துக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி மகிழ்ந்து கொண்டிருக்கிறதாம்... எங்கள் தமிழரின் வயிறுகள் எரிந்து கொண்டிருக்க.... எங்கள் இனத்தின் பரம வைரிகளுக்கு பாதசேவை செய்யும் பாரத மாதாவின் பவித்ர புத்திரர்களுக்கு தமிழகம் தக்க பதிலைப் புகட்டும் நாளும் வெகு தொலைவில் இல்லைதான் என்பதை உணரட்டும்!