சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தையை சந்தித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தை முஸாபர் வானி பெங்களூருவில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த 50 நாட்களாக ஜம்மு காஷ்மீர் முற்று முழுதாக முடங்கிப் போயுள்ளது. அங்கு ராணுவத்துக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவை அளித்து வருகிறது.
Muzaffar Wani, the father of Burhan Wani was in the ashram for the last 2 days. We discussed several issues. pic.twitter.com/IDyyxJSG83
— Sri Sri Ravi Shankar (@SriSri) August 27, 2016
இந்த நிலையில் பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தை முஸாபர் வானி பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய முஸாபர் வானி, சொந்த வேலையாக பெங்களூரு வந்த போது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்தேன். அவர் அமைதியும் சமாதானத்திற்குமான நபர்; நான் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.
அவர் என்னிடம் காஷ்மீர் மக்கள் என்னதான் கேட்கின்றனர் என்றார். நான் அவரே காஷ்மீர் வந்து மக்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ளட்டும் என்றேன்.
நீரிழிவு நோய் சிகிச்சைக்காக ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த முஸாபர் வானி, விடுதியில் தங்குவது பாதுகாப்பாக இருக்காது என்று ஆசிரமத்தில் தங்கியதாக கூறப்படுகிறது.