கேரளாவில் தெரு நாய்கள் அடித்துக் கொலை: மேனகா காந்தி கண்டனம்
கேரளாவில் தெரு நாய்களை அடித்துக் கொன்றவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை அமைச்சர் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 90 வயது முதியவர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் அங்கு சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்களை வியாழக்கிழமை அதிகாலையில் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வர்கலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள மாநில காவல்துறை இயக்குநரையும் தொடர்புகொண்டு அவர் பேசியுள்ளார்.
மேனகா காந்தியின் இந்தக் கருத்துக்கு கேரளாவில் பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம் மாநிலச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், விலங்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் போல மேனகா காந்தி நடிக்கிறார். நாய்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நாய்களுக்கு சாதகமாக கருத்து தெரிவிப்பது கேரள மாநிலத்தவரை அவமதிப்பது போல் உள்ளது என கூறியுள்ளார்.