கல்லூரி மேடையில் வைத்து ராகுல் காந்திக்கு 'ஷாக் கொடுத்த' பெங்களூர் மாணவிகள்!
பெங்களூர்: ராகுல் காந்தி எதிர்பார்க்காத பதிலை கூறி, கல்லூரி மேடையில் வைத்து ராகுல் காந்தியை தர்ம சங்கடத்தில் நெளிய வைத்துவிட்டனர் பெங்களூர் கல்லூரி மாணவிகள்.
பெங்களூர், மவுண்ட்கார்மெல் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார். அவர்கள் கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.
பேசிக்கொண்டிருந்தபோது, "நாங்கள் 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தோம். சில தவறுகளால் ஆட்சியை இழந்துவிட்டோம். ஆயினும் நாட்டின் 20 சதவீத வாக்குகள் எங்கள் வசம் உள்ளது என்பதை மறக்க கூடாது.
ஏழைகளுக்கு பலனில்லை
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களும் செயல்பாட்டுக்கு வருவதில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது எனில், அதன் பலன் யாருக்கு கிடைத்தது, குறிப்பாக ஏழைகளுக்கு கிடைத்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் நமது நாட்டின் பலமே ஏழைகள்தான்.
ராகுல் ஷாக்
நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதை அரசு ஒரு கொள்கையாக அறிவிக்கிறது. இது தேவையா. க்ளீன் இந்தியா செயல்பாட்டிலேயே இல்லை" இவ்வாறு பேசிக்கொண்டிருந்த ராகுல் காந்தி, திடீரென மாணவிகளை பார்த்து "க்ளீன் இந்தியா திட்டம் செயல்பாட்டில் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பினார். 'இல்லை' என பதில் வரும் என நினைத்து கூட்டத்தை பார்த்தார் ராகுல் காந்தி. ஆனால், பெரும்பாலான மாணவிகள் 'ஆம்' என்று கோரசாக குரல் கொடுத்தனர். சிலர் மட்டுமே 'இல்லை' என்றனர்.
மீண்டும் கேட்டார்
இதனால் ராகுல் காந்தியின் முகமே வெளிறிவிட்டது. இருப்பினும் சமாளித்தபடி, மீண்டும், அதே கேள்வியை கேட்டார். தனது நிலைமையை உணர்ந்து மாணவிகள் 'இல்லை' என பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்த்த ராகுலுக்கு மீண்டும் ஏமாற்றமே. இப்போதும் மாணவிகள் 'ஆம்' என்று பதிலளித்தனர்.
வேலை இருக்கா
இதையடுத்து சட்டென, 'மேக் இன் இந்தியா திட்டம்' செயல்படுகிறதா? என ராகுல் கேட்டார். அதற்கும் மாணவிகள் 'ஆம்' என குரல் கொடுக்க, சிரித்தபடியே, 'அப்படியானால் உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா' என ராகுல் கேட்க அதற்குதான் பாதி இல்லை என்றும் பாதிபேர் ஆம் என்றும் பதில் கூறினர்.
ராகுல் ஏமாற்றம்
இந்த பதில்களால், ராகுல் காந்தி மேடையில் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். இளைஞர்களின் மன ஓட்டத்தை அவர் புரிந்துகொள்ளவில்லையா, அல்லது பாஜக அரசின் திட்டங்களின் வீச்சு எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையா என்பது இதில் தொக்கி நிற்கும் கேள்வி.
|
ராகுல் எஸ்கேப்
இருப்பினும், "நீங்கள் திட்டங்கள் செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை" என்று சிரித்தபடியே கூறி அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராகுல் காந்தி.