ஆளுநராக தொடர மாட்டோம் என்பதை ராஜன் உணர்ந்திருக்கிறார்.. சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக 2-வது முறையாக தொடர விருப்பம் இல்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்ததையடுத்து, தான் தேர்ந்தெடுக்கப்பட மாட்டோம் என்பதை ராஜன் உணர்ந்திருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நியமித்தது. அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4 ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
எனவே, அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர், ரிசர்வ் வங்கி சக அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநராக 2வது முறையாக தொடர விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, "ரகுராம் ராஜனின் முடிவு நல்லது. ராஜன் தொடர்ந்து அப்பதவியில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்பதற்காக நான் கூறிய காரணங்கள் அனைத்தும் முக்கியமானவையே. ரகுராம் ராஜன் ஒரு அரசு ஊழியர். எனவே ஊழியர்களை நாம் வெகுஜன வாக்கு அடிப்படையில் நாம் தேர்ந்தெடுப்பதில்லை" என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரகுராம் ராஜன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். மேலும், ரகுராம் ராஜன் முழுதும் தன்னை இந்தியராக உணரவில்லை என்றும் அமெரிக்கக் குடியுரிமைக்காக கட்டாய பயணம் மேற்கொள்பவர் என்றும் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இந்திய பொருளாதாரத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தி விட்டார் என்றும் பல்வேறு விதத்தில் அவர் மீது தாக்குதல் தொடுத்தார் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ரகுராம் ராஜனின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும். அவரது நல்ல பணிகளை இந்த அரசு பாராட்ட கடமைப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.